காதலின் சின்னம் தாஜ் மஹால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சென்னையின் மையப்பகுதியில் தியாகத்திற்கான வரலாற்று சின்னம் ஒன்று உள்ளது. மிகவும் சிதிலமடைந்து, சமூகவிரோதிகளின் கூடாரமாகிவிட்ட அந்த அடையாளச் சின்னம் தற்போது அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பழைய மெட்ராஸின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து, தற்போதைய சென்னையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கட்டடம் ஸ்மித் மெமோரியல்.
அழகான எலியட்ஸ் கடற்கரைக்கு வரும் எல்லோருக்குமே, அங்கு பாவப்பட்டு நிற்கும் இந்தக் கட்டடம் எதற்காகக் யாருக்காகக் கட்டப்பட்டது என்று தெரிவதில்லை.
1930-ஆம் வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி நடுக்கடலில் தத்தளித்த பலரது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை இழந்த கேஏஜெ ஸ்மித் என்ற டச்சு மாலுமியின் நினைவாக கட்டப்பட்டது தான் இந்த நினைவுச் சின்னம். ஸ்மித் மெமோரியல் என்ற இதன் பெயர் கூட யாருக்கும் தெரிவதில்லை.
பலவீனமான அஸ்திவாரத்தாலும் கடற்காற்றாலும் விரிசல் விட்டு நின்றுகொண்டிருக்கும் இந்த நினைவுச் சின்னத்தை தற்போது புனரமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கு சென்னையில் இருந்து செயல்படும் தன்னார்வக் குழுவான ரீச் ஃபவுண்டேஷன் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.
சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலையின் கட்டட கலைத்துறையோடு இணைந்து இதனை புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன. பிறரது உயிரைக் காப்பதற்காக தன்னுயிரைக் கொடுத்த ஸ்மித்தின் நினைவுச் சின்னம் இன்னும் 6 மாதங்களுக்குள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

No comments:
Post a Comment