15 June 2013

கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு "தனி பட்ஜெட்' தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு "தனி பட்ஜெட்' தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பருவமழை பொய்த்து போவதால், பாசன திட்டங்களை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. மழைநீரை சேமிக்கும் குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காததாலும்; நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்காததால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி விவசாய பணிகளுக்கான தொழிலாளர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு சென்றடையாத வேளாண் பல்கலை., தொழில்நுட்பங்கள், பெரும் சவாலாக உள்ளன. மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, தொழில்நுட்ப பிரச்னைகளை சந்தித்தும், விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விதை, இடுபொருட்கள், பூச்சிமருந்து, விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்தும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான கூலி கூட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாய விளை பொருளுக்கு இடைத்தரகர்களும், வியாபாரிகளும் விலை நிர்ணயிப்பதையும், விளை பொருட்களை சந்தைப்படுத்தும் விழிப்புணர்வு பெரும்பாலான விவசாயிகளுக்கு இல்லை, என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர் விவசாயிகள்.
விவசாயத்தில் முதலீடுக்கு ஏற்ப லாபம் கிடைப்பதில்லை என்ற மனக்குறையும், இயற்கை ஒத்துழைப்பு இல்லாததும், விவசாயிகளை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.





இதன்விளைவாக, விவசாயத்தை கைவிட்டு, நகரத்தை நோக்கி நகர்ந்து வாழ்க்கையை தேடும் நிலை உருவாகியுள்ளது. மானாவாரி விளைநிலங்கள் மட்டுமின்றி, பாசன நிலங்களும் "லே-அவுட்'களாக மாறி வருகின்றன. உணவு உற்பத்திக்கான நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுகின்றன. விவசாயத்தை பாதுகாக்க, "விவசாய விளை நிலங்களில் "லே - அவுட்' அமைக்க அனுமதியில்லை' என்ற அரசின் அறிவிப்பு, "கரன்சி'களால் கரைகிறது. இதன்விளைவாக தமிழகத்தின் விவசாய நிலப்பரப்பு, ஒவ்வொரு ஆண்டும் சுருங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் பாசன பரப்பு குறைந்துள்ளது. அதில், 50 சதவீதத்துக்கும் அதிகமான நிலங்கள், "லே - அவுட்'களாக மாறிவிட்டன என்பது அதிர்ச்சித் தகவல்.

நெல் சாகுபடி, 8.65 லட்சம் எக்டர் பரப்பும்; தானிய சாகுபடி 5.60 லட்சம் எக்டர் பரப்பும்; பருப்பு சாகுபடி 1.20 லட்சம் எக்டர் பரப்பும்; கரும்பு சாகுபடி 2.38 லட்சம் எக்டர் பரப்பும் குறைந்துள்ளது. தென்னை சாகுபடி பரப்பு 45 ஆயிரம் எக்டர் பரப்பு அதிகரித்துள்ளது. சாகுபடி பரப்பு குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தொழிற்சாலைகள், "லே-அவுட்'கள், திட்டப்பணிகளுக்காக விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாய மேம்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும். இளம்தலைமுறையினர் விவசாயத்தின் மீது அக்கறை செலுத்தும் வகையில் கல்வித்திட்டங்கள் உருவாக்க வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக, விவசாயத்திற்கென "தனி பட்ஜெட்' கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

"
தனி பட்ஜெட்' அவசியம்! கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது: விவசாய பரப்பு வேகமாக குறைகிறது, மக்கள் தொகை அதிகரிப்பால் உணவு தேவை வேகமாக அதிகரிக்கிறது. எதிர்காலம் எப்படி செல்கிறது என்பதை கணிக்காமல், விவசாய குடும்பத்தினர் வேறு தொழிலுக்கு மாறி தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தியுள்ளார். விவசாயத்தை தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். விளைபொருட்களுக்கு மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யாமல், மூலதனம் மற்றும் உற்பத்தி செலவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்தி பெருகினால் விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க வேண்டும். விவசாய பிரச்னைகளை மையப்படுத்தி தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும் என்பதை 1970 முதல் வலியுறுத்துகிறோம். இனியாவது அரசு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு, கந்தசாமி தெரிவித்தார்.

பாலாறு படுகை பாசன திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது: ஆள் பற்றாக்குறை, கட்டுப்படியான விலையில்லை போன்ற பல்வேறு காரணங்களால், விவசாய பரப்பு குறைந்து வருகிறது. தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும். விளைநிலத்தை, வீட்டுமனை இடமாக மாற்ற அனுமதிக்க கூடாது. நீர்நிலை, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதுகாக்க வேண்டும். மழை நீரை முழுமையாக சேமிக்க திட்டமிட வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மண் வளம், தட்பவெட்ப நிலை மாறுபடுகிறது. அதற்கேற்ப, மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்தித்து, கருத்து கேட்டு திட்டங்கள் வகுக்க வேண்டும். விவசாய தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் கொண்டு வந்து, ஊக்குவித்தால் மட்டுமே உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இவ்வாறு, பரமசிவம் தெரிவித்தார்.

நன்றி : Ganesh

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home