27 August 2014

தூக்கம் கண்களை தழுவவில்லையா?

நாட்டில் 20 சதவீதம் பேர் சரியாக தூக்கம் வராமல் தவிக்கின்றனர். மருத்து வமனைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றவர்களில் 50 சதவீதம் பேர் தூக்க குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விபரங்கள். தூக்கமின்மை நீண்டு கொண்டே சென்றால் அது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சுகமான தூக்கம் மூளையின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். ஞாபகம், கவனம், சிந்தனை திறன் போன்றவை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒருவர் தடையின்றி தினசரி 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தூக்கமின்மை ஏற்பட்டால் வெவ்வேறு விதமான பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும்.

படுக்கையில் கிடந்தாலும் தூக்கம் வராமல் தவித்தல், தூக்கத்தின் இடையே திடீரென்று தூக்கம் கெட்டு எழுதல், குறைந்த நேரம் மட்டுமே தூங்க முடிகின்ற நிலை, சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்தால் தொடர்ந்து பின்னர் தூங்க முடியாத அவஸ்தை போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் நீண்ட நேரம் தூங்கினாலும் எழும்பும்போது உடல் அசதி காணப்படும். சரியான தூக்கம் அமையாததே இதற்கு காரணம். இதற்கும் பரிகாரங்கள் உள்ளன.

* நீண்ட நாட்களாக தூக்கமின்மை பிரச்னை இருந்து வந்தால் அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மன குழப்பங்களுக்கு தீர்வு கண்டால் தூக்கம் தானாகவே வரும். ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கம் ஒரு பிரச்னையாகி வந்தால் அது கவனிக்கத்தக்க விஷயம் என்பதை மறக்க கூடாது.

* இருதயநோய், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, நீரழிவு நோய், தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்டவை தூக்கமின்மைக்கு காரணங்கள். மன அமைதி குறைவு, சந்தேக நோய்களும் தூக்கம் கெடுவதற்கு காரணமாக அமையலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதல் தூக்கத்தை கெடுக்கும்.

* தூங்குவதற்கு முறையாக நேரம் ஒதுக்காத நிலை, இரவில் அடிக்கடி வேலை செய்தல், மன அழுத்தம், பகலில் தூங்கும் தன்மை போன்றவையும் தூக்க குறைவை ஏற்படுத்தும். அதிகமாக சேட்டையில் ஈடுபடுகின்ற குழந்தைகளுக்கும் இரவில் தூக்க குறைவு காணப்படும்.

* சாதாரண பிரச்னைகளையும் பெரிதாக்கி யோசனைகளில் மூழ்குவது, பிரச்னைகளுக்கு நடுவில் சிக்கி தவிப்பவர்கள் மத்தியில் இருப்பது, கணவன்-மனைவிக்கு இடையே பொருத்த குறைவு, எப்போதும் சலசலப்பு காணப்படுகின்ற சமூக சூழல் போன்றவையும் தூக்கம் குறைவு ஏற்பட காரணமாக அமையும்.

* தூக்கமே ஒரு பிரச்னையாவதில் இருந்து தப்பிக்க எல்லா நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். குறித்த நேரத்தில் தூங்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மதிய தூக்கம் கட்டாயமானால் அது அரைமணி நேரத்தை கடக்க வேண்டாம். தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* தூங்க செல்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விளக்குகளை எரியவிட்டு தூங்க கூடாது. படுக்கையில் இருந்தவாறே புத்தகம் படித்தல், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவு குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன்னர் புகைபிடிக்க கூடாது.

* தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குளிக்கலாம். தூங்க சென்று விட்டால் இடைஇடையே நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தூக்கமின்மை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home