27 August 2014

உழைக்க கற்றுக் கொடுப்பதே பேருதவி - மாத்தி யோசி

சுயநலம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் பொதுநல சிந்தனைகளோடு, வலம் வரும் அரவிந்தன் ஒரு பைக் மெக்கானிக். தனது சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தனியாக பிரித்து வைத்து, அதன் மூலம் ஆதரவற்ற முதியோர், படிக்க வசதியில்லாத குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு உதவுவது அவரது வழக்கம்.

இப்படிப்பட்ட அரவிந்தனை ஒரு நாள் சந்திக்க வந்தான், பிளஸ்2 படித்து விட்டு உயர்படிப்புக்கு செல்ல காத்திருந்த மாணவன் கபிலன். வயல்வெளியில் வேலை செய்து தாய் மாரியம்மாள் கொண்டு வரும் சொற்ப வருமானம் மட்டுமே கபிலனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம்.

‘கல் உடைக்கும் வேலை செய்து வந்த, கபிலனின் தந்தை வேலப்பனுக்கோ, மகனை இன்ஜினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு. இதற்காக காலம் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்தார் வேலப்பன். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நாள் குவாரியில் நடந்த வெடி விபத்தில் வேலப்பன் சிக்கினார். சிகிச்சை என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் சில நாட்கள் மரணத்தோடு போராட்டம் நடத்தினார். இறுதியில் மரணத்திற்கே வெற்றி கிடைத்தது.

இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, மகனை அழைத்து நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் வடித்த வேலப்பன், எனது நாட்கள் எண்ணப்படுகிறது. நான் இறந்து விடுவேன். ஆனால் நீ இன்ஜினியராக வேண்டும் என்ற எனது கனவு இறந்துவிடக்கூடாது. இதற்காக நீ முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு நல்லவர்கள் உதவி செய்வார்கள் என்று வேலப்பன் கூறிய கடைசி வார்த்தைகள் தான் கபிலனின் வேதவாக்கு.

கபிலனின் நிலைகேட்டு வருந்திய அரவிந்தன், தனது கையில் இருந்த பணம் முழுவதையும் அவனது கையில் திணித்தான். தனது குடும்பத்தை பற்றிய கவலை அவருக்கு இல்லை. ஆனால் கபிலன், ‘‘இன்ஜினியரிங் விண்ணப்பம் வாங்க இப்போது எனக்கு தேவை இந்த பணம் மட்டும் தான். அதுமட்டும் போதும்’’ என்று என்று கூறி, சில நூறு ரூபாயை எடுத்துக் கொண்டான்.

‘‘என் தந்தை இருந்திருந்தால் உழைத்து என்னை படிக்க வைத்திருப்பார். ஆனால் இப்போது நானே, உழைத்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே இப்போது எனக்கு நீங்கள் செய்வது உதவி. கல்லூரியில் சேர அழைப்பு வரும் வரை உங்கள் பட்டறையில் எனக்கும் உழைக்க கற்றுக் கொடுங்கள்.
அதுதான் நீங்கள் எனக்கு செய்யும் வேண்டிய பேருதவி’’ என்றான் கபிலன். அப்போது அரவிந்தனின் கரங்கள், அவருக்கு தெரியாமலேயே கபிலனுக்கு அடித்தது ஒரு ராயல் சல்யூட்...

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home