30 December 2013

சீனாவில் முதல் பள்ளிவாசல்



இன்றளவில் சீனாவில் முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம் நபி தோழர்களில் ஒருவரான - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிருக்கு உயிரான தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் ஒருசிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயலாக்கங்களும் வரலாற்று ஏடுகள் அவர்களின் பெயர்களை உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம். பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 610இல் மக்காவில் வைத்து அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்தை மக்களிடையே விதைத்திடும் அழைப்புப் பணியில் ஈடுபட்ட தொடக்க நிலையில், சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பெருமானாரிடம் ஒப்பந்தம் செய்த, துவக்க நிலை முஸ்லிம்களில் 17வது நபர்தான் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அப்போது அவர்களின் வயது 17. “அஷ்ஷரத்துல் முபஷ்ஷிராசொர்க்கம் உறுதி என்று நன்மாராயம் வழங்கப்பட்ட 10 நபித்தோழர்களில் ஹஸரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மார்க்கத்தையும் பெருமானாரையும் கேலி செய்து பேசியதற்காக நிராகரிப்பாளன் ஒருவனின் மண்டையை உடைத்து தனது இளம் வயது வேகத்தை காட்டியவர் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ். அதுதான் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தபோது, சிந்தப்பட்ட முதல் இரத்தம். இஸ்லாத்தின் வீச்சும் வேகமும் அதிகரிக்கவே பெருமானாருக்கும் இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் அதிகமாகி இனி மக்காவில் வாழ இயலாது என்ற நிலை உருவானது. எதிரிகள் பெருமானாரையும் முஸ்லிம்களையும் கொலை செய்திட முடிவு செய்தனர். அந்த நேரத்தில் இறைவனுடைய வழிகாட்டுதல் இறை வசனமாக பெருமானாருக்கு இறங்கியது.இம்மையில் நன்மை செய்தவர்களுக்காக (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலாமானது. நிச்சயமாக பொறாமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்”. (அல்குர்ஆன்39:10) பாதுகாப்புத் தேடி புலம் பெயர்வதை சுட்டிக் காட்டி இறக்கிய வசனத்தின் அடிப்படையில் பெருமானாரின் வழிகாட்டுதலின்படி முஸ்லிம்களில் 11 நபித்தோழர்களைக் கொண்ட ஒரு சிறிய குழு மக்காவிலிருந்து புறப்பட்டு செங்கடலைத் தாண்டி அபீஸீனியா (எத்தியோப்பியா) சென்று நஜ்ஜாஷிஎன்ற கிருத்துவ மன்னரிடம் அடைக்கலமானது. இரண்டாவது குழு ஏறக்குறைய 100 முஸ்லிம்கள் மக்காவிலிருந்து அபீஸீனியாவிற்கு கி.பி. 615 தில் புறப்பட்டுச் சென்றனர். ஜாபிர் இப்னு அபிதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற இந்த குழுவில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அபிஸீனியா சென்ற 100 பேர்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இந்தக் குழுவை பின்தொடர்ந்து வந்த குறைஷிகள் நஜ்ஜாஷிமன்னரிடம் முறையிட்டு வாதம் செய்ததையும் நஜ்ஜாஷி மன்னர் அவற்றை நிராகரித்து முஸ்லிம்களுக்கு பரிபூரண அடைக்கலம் கொடுத்ததையும் நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். அபீஸீனியாவில் முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றினர். அங்கே வாழ்ந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தனர். அதன் மூலம் அபீஸீனியாவில் அதாவது இன்றைய எத்தியோப்பியா, சோமாலியா, எரிடீரியா, சூடான் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஆசையாக அள்ளித் தழுவுவதற்கு இந்த புலம் பெயர்வு சம்பவம் காரணமாக அமைந்தது. இந்தச் சூழலில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இளமை துடிப்பின் காரணமாகவும் பெருமானாரிடம் பெற்ற ஆன்மீகப் பயிற்சியின் காரணமாகவும் அபீஸீனியாவை விட்டு புறப்பட்டுச் சென்று இந்த உலகம் முழுவதும் அல்லாஹ்வுடைய தீனை நிலைநிறுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். மனம் இருப்புக் கொள்ளவில்லை. எங்கே புறப்பட்டுச் செல்வது? எப்படிச் செல்வது? யாருடன் செல்வது என்று ஹஸ்ரத் ஸஅத் அவர்களது உள்ளம் கொந்தளித்தது. இறுதியாக தனது தந்தை செய்த வியாபாரம் நினைவிற்கு வருகிறது. ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் தந்தை அபீ வக்காஸ் அவர்கள் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்தது நினைவிற்கு வருகிறது. அல்லாஹ்வுடைய செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கு அவர்கள் தேர்வு செய்த பகுதி கிழக்காசியப்பகுதி. தன் பயண முடிவை உறுதியாக்கிக் கொண்டு அபீஸீனியாவை விட்டுப் புறப்பட தயாராகிறார்கள். பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் புகுந்து இந்தியப் பெருங்கடலில் நுழைகிறது. (இந்தியப் பெருங்கடலின் ஆழத்தையும் நீளத்தையும் அணு அணுவாக அறிந்து வைத்திருந்த இனம் உலகில் இரண்டே இனம் தான். ஒன்று அரபு இனம் மற்றொன்று தமிழினம்.) ஹஸ்ரத் ஸஅத் அவர்களின் பாய்மரப் படகு தமிழக கடலோரப் பகுதிக்கு வருகிறது. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பாக்நீரினை வழியாகச் சென்று வங்கக் கடலில் கலந்து இறுதியாக கல்கத்தா அருகில் உள்ள இன்றைய பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை அடைந்தது. அன்றைய சேர சோழ பாண்டிய நகரங்களாகவும் இன்றைய தமிழக கேரள துறைமுக நகரங்களாகவும் விளங்கும் பூம்புகார், நாகப்பட்டிணம், கீழக்கரை, காயல்பட்டிணம், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) காசர்கோடு போல பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகமும் உலகப் புகழ்பெற்ற துறைமுகம்தான். கடந்த 60 ஆண்டுகளாகத் தான் அது எல்லைக் கோடுகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாதேஷ் என்ற நாடாக ஆக்கப்பட்டுள்ளதே தவிர அதுவும் இந்திய முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரே நிலப்பரப்புதான். இன்ஷா அல்லாஹ் தொடருவோம் .. புகைபட உதவி சகோ meeran maideen..
-அஷ்ரப்




ஒரு வரல்ர்ற்று பிழை காயல்பட்டினம் துறைமுகமில்லை. அது குலசேகரன்பட்டணம்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home