24 September 2014

செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் : வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

பெங்களூர்: செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது. விண்கலத்தில் உள்ள 8 இஞ்சின்களையும் இயக்கி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதல் சோதனையிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  இந்திய விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று காலை 8 மணயளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்திய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை தான் இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியது என்றார். மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக மோடி பெருமிதம் கொண்டார். முதல் முயற்சிலேயே வெற்றி பெறும் வகையில் பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தியா அடுத்த சவால்களுக்கு தயாராக வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

மங்கள்யானின் பயணம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள் ஏவப்பட்டது. 323 நாள் முடிவில் 2014 செப்டம்பர் 22-ல் செவ்வாய் ஈர்ப்பு விசை பகுதியை அடைந்தது. 325 நாள் பயணித்து செவ்வாய் கிரக சுற்று வட்டபாதையை மங்கள்யான் அடைந்தது. 21கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது.

சாதனை படைத்த மங்கள்யான்

முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுப் பாதையில் விண்கலத்தை இந்தியா நிலை நிறுத்தியது. செவ்வாய் சுற்றுப்பாதையில் விண்கலத்தை முதல் முயற்சியில் நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா என்ற சாதனையை நிகழ்த்தியது.

மங்கள்யான் உருவான விதம்

செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக்கோளை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு மத்திய அரசு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ரூ.454 கோடி மதிப்பீட்டில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயற்கைக்கோள் தயாரிக்கும் பணி துவங்கியது. மொத்த மதிப்பீட்டில், ரூ.125 கோடி செலவில் மங்கள்யானுக்கு விண்ணில் செலுத்த தேவையான கருவிகள், ரூ.153 கோடி செலவில் செயற்கைக்கோள் மற்றும் இதர தொகை ஏவுதளம் மற்றும் இதர டிராக்கிங் சிஸ்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

மங்கள்யான் பணி என்ன?

செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் பற்றி மங்கள்யான் ஆராய்ச்சி மேற்கொள்ளும். மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம் உள்ளதா எனவும் மங்கள்யான் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதையும் மங்கள்யான் கண்டறியும்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home