18 February 2014

வால்வோ பஸ்களில் அவசர கால வழிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விபரம்



வால்வோ பஸ்களில் இருக்கும் அவசர கால வழிகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை பயணிகள் நலனை கருதி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கேஎஸ்ஆர்டிசி) வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வால்வோ பஸ்கள் அடுத்தடுத்து தீ விபத்துக்களில் சிக்கி பல உயிர்களை காவு வாங்கின. இதைத்தொடர்ந்து, தற்போது பயணிகளில் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வால்வோ பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டிருக்கிறது.










அவசர கால வழிகள்
*****************************

வால்வோ பஸ்களில் முக்கிய வழியை தவிர்த்து 6 அவசர கால பாதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வால்வோ பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளன

எங்கப்பா இருக்கு?
***************************

வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று முக்கிய வழியை தவிர்த்து பக்கவாட்டில் 4 கண்ணாடி ஜன்னல்களில் அவசர வழிகள் உள்ளன. தவிர, மேற்கூரையில் 2 அவசர வழிகள் உள்ளன.

தீயணைப்பு கருவி
**********************************

பஸ்சின் இடது பக்க முன் இருக்கைக்கு முன்பாகவும், கடைசி வரிசை நடு இருக்கையின் கீழேயும் தலா ஒரு தீயணைப்பு உருளைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவசரத்திற்கு...
************************************

வால்வோ சிங்கிள் ஆக்சில் மற்றும் மல்டி ஆக்சில் பஸ்களில் கண்ணாடி ஜன்னல்களில் அவசர கால வழி குறித்த விபரம் எழுதப்பட்டிருக்கும். அத்துடன் அந்த கண்ணாடி ஜன்னல்களுக்கு அருகிலேயே சுத்தியலும் பொருத்தப்பட்டிருக்கும். அவசர சமயத்தில் சுத்தியலால் கண்ணாடியை உடைத்து கவனமாக வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தியல்
*********************************

அவசர பாதை அமைந்துள்ள கண்ணாடி ஜன்னலுக்கு மேலே சுத்தியல் பொருத்தப்பட்டிருப்பதை காட்டும் படம்

கதவை திறக்க
**********************************

முக்கிய கதவை திறக்கும் சுவிட்ச் டிரைவர் இருக்கையின் முன்புற டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனை வலது புறம் திருப்பினால் கதவு திறந்து கொள்ளும்.

கூரையிலும் அவசர வழி
************************************

கூரையில் 2 அவசர வழி பாதைகள் உள்ளன. அவற்றை மேற்புறமாக தள்ளி திறந்து வெளியேற முடியும்.

சீட் பெல்ட்
****************************

முன் இருக்கைகளிலும், கடைசி வரிசையிலுள்ள நடு இருக்கையிலும் சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தியமா?
*****************************

பஸ்சின் நாலாபுறமும் அவசர கால வழிகள் இருந்தாலும், அதிலிருந்து எளிதாக வெளியேற முடியுமா என்பதில் இன்னமும் சிக்கல் இருக்கிறது. நடுநிசியில் விபத்து நிகழும்போது அதனை பயணிகள் ஊகித்து சுதாரிப்பதற்குள் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது சமீபத்திய சம்பவங்கள் ஆதாரமாக நிற்கின்றன. முன்புறம் விபத்து நிகழும்போது வேண்டுமானால் இந்த வழிகள் கைகொடுக்கும். ஆனால், ஒரு சில நிமிடங்களில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரியும்போது உள்ளே இருப்பவர்கள் அத்துனை துரிதமாக செயல்பட்டு வெளியேற முடியுமா என்பது இப்போதும் சந்தேகத்திற்கு இடமானதாகவே தெரிகிறது. மேலும், கண்ணாடி ஜன்னலை உடைத்து கீழே குதிக்கும்போதும் பெரிய அளவில் காயமடைவதற்கான வாய்ப்பும் இருப்பதோடு, பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியேறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

தீர்வு
****************

அனைத்து வால்வோ பஸ்களிலும் சரியான உயரத்தில் எளிதாக வெளியேறும் வகையில் ஒரு அவசர கால வழி அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். கர்நாடக அரசு போட்ட அதிரடி உத்தரவை பின்பற்றி, வால்வோ பஸ்களை இயக்கும் அனைத்து  டிராவல்ஸ் நிறுவனங்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இரண்டு இருக்கைகளின் வருவாய் பாதித்தாலும் பரவாயில்லை, பயணிகளின் உயிர் அதனைவிட முக்கியம் என்பதை மனதில் வைத்து, எளிதாக வெளியேறுவதற்கான அவசர வழி அமைத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான சம்பவங்களை தவிர்க்கலாம். தவிர, பஸ்சில் பயணிகள் அமர்ந்தவுடன் அவசர கால வழிகள் அமைந்துள்ள பகுதிகள் குறித்த தகவல்களை நடத்துனர் மூலம் பயணிகளுக்கு தெரிவிப்பதும் அவசியம்.
-அஷ்ரப்

மோட்டார்சைக்கிள் பற்றிய மூட நம்பிக்கைகளும், உண்மைகளும்!!



பைக் ஓட்டுபவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மோட்டார்சைக்கிள் பற்றிய பல கற்பனை கட்டுக் கதைகள் பரவலாக இருப்பதுண்டு. ஆனால், அந்த கட்டுக் கதைகளில் இருக்கும் உண்மை தெரிந்தால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
அதற்காகவே,மோட்டார்சைக்கிள் பற்றி இருக்கும் தவறான நம்பிக்கைகளையும், அதன் உண்மைகளையும் இந்த செய்தி தொகுப்பில் வழங்குகிறோம்.
அஷ்ரப்


















சைலென்சர் உயிர் காக்கும்
************************

சிலர் பைக்குகளில் அதிக சப்தத்தை வெளிப்படுத்தும் வகையிலான சைலென்சரை பொருத்தினால், உயிரை காப்பாற்றும் என்கின்றனர். இதில் சிறு உண்மை இருந்தாலும், சில வேளைகளில் விபரீதத்தை ஏற்படுத்தும்.
அதிக சப்தம் தரும் சைலென்சர்கள் மூலம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை எளிதாக ஈர்க்க முடிவதால், தைரியமாக செல்கின்றனர். அதேவேளை, சில டிரைவர்கள் திடீரென வரும் இந்த சப்தத்தை கேட்டும் அதிர்ச்சியில் விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சப்தம் தரும் சைலென்சரால் உயிரை காக்கும் என்ற எண்ணம் மிகத் தவறானதாக கூறலாம்.

பைக் வேண்டாம்
***********************

பைக்கில் செல்வது பாதுகாப்பானது இல்லை, வாங்க வேண்டாம் என்று பலர் அறிவுரை கூறுகின்றனர். உயிரை பறித்துவிடும் என்று பயமுறுத்தும் ஆட்களும் உண்டு.
ஆனால், இப்போது வரும் பைக்குகளில் சரியான வேகத்தில் செல்லும் போது மிகச்சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் சிறந்த பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன. எனவே, பைக்கினால் உயிர் போய்விடும் என்று பயமுறுத்துவது மூடத்தனமானது

ரேஸ் டயர் போட்டா...
*************************

ரேஸ் டயர் பொருத்தினால் வேகமாக செல்ல முடியும் என்று சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், ரேஸ் டயர்களை சாதாரண சாலையில் வைத்து ஓட்ட முடியாது என்பதுடன், ரேஸ் டயர்கள் சூடாக சூடாகத்தான் சிறப்பான ரோடு கிரிப்பை தரும். எனவே, சாலையில் வைத்து ஓட்டும்போது போதிய சூடு கிடைக்காது என்பதால், போதிய கிரிப்புடன் செல்லாது. ரேஸ் டயர்கள் பொருத்தினால் வேகமாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என்பது தவறான நம்பிக்கை.

ஸ்பீடு கன் சும்மா?
****************************

வேகக் கட்டுப்பாட்டு கொண்ட சாலைகளில் போலீசார் 'ஸ்பீடு கன்' கருவி மூலம் கார்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். டூ வீலர்கள் அந்த கருவியில் தெரியாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால், தற்போது வரும் நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்பீடு கன் கருவிகள் மூலம் வேகக்கட்டுப்பாட்டை தாண்டி வரும் டூ வீலர்களையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

தேய்ச்சி எடுக்கணும்...
****************************

புதிய டயர்கள் வாங்கும்போது அதில் இருக்கும் பளபளப்பு பூச்சு காரணமாக பைக் வழுக்கி விடும் என்ற நம்பிக்கையும் காலம் காலமாக இருந்து வருகிறது. இதற்காக, சிலர் டயரில் காற்றை குறைத்துவிட்டு தாறுமாறாக ஓட்டி டயரில் இருக்கும் பளபளப்பு பூச்சை போக்குவதற்கு முயல்வதுண்டு. ஆனால், இதுவும் மகா தவறான எண்ணம்தான். புதிய டயர்களில் இருக்கும் பளபளப்பு தன்மையால் வழுக்கும் என்பது தவறான கூற்று. அத்துடன் சரியான காற்றழுத்தத்தில் வைத்து வண்டியை ஓட்டாவிட்டால் டயர் சீக்கிரம் சேதமடைந்துவிடு

கீழே குதிச்சுடணும்
******************************

எதிரில் வரும் வாகனத்தின் மீது மோதும் நிலை ஏற்பட்டால், மோட்டார்சைக்கிளை விட்டு கீழே குதித்து விட வேண்டும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. இதுபோன்று, குதிக்கும்போது மோதுவதை விட அதிக காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஸ்டைலுக்காக ஜாக்கெட்
***************************

மோட்டார்சைக்கிள் ரைடர்கள் பெரும்பாலும் கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டுகளை அணிவதை பார்த்து ஸ்டைலுக்காக போட்டிருக்கிறான் என்று பலர் கிண்டலடிப்பதுண்டு. ஆனால், லெதர் ஜாக்கெட்டுகள் பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே வருவதுதான் முக்கிய காரணம். மேலும், கீழே விழும்போது தோலில் ஏற்படும் சிராய்ப்புகளை லெதர் ஜாக்கெட் தவிர்க்கும்.
இரவு நேரங்களில் கருப்பு நிற ஜாக்கெட்டுகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது அவசியம். தற்போது லெதர் ஜாக்கெட்டுகளுக்கு பதில் சிந்தெட்டிக் ஜாக்கெட்டுகள் மிகக் குறைந்த எடை கொண்டதாக கிடைக்கின்றன. மேலும், பல்வேறு வண்ணங்களிலும் கிடைப்பதோடு, இரவில் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையிலான பிரதிபலிப்பு ஸ்டிக்கருடன் வருகின்றன

பெட்ரோமாஸ் லைட்...
****************************

என்னோட கனவு ஹயபுசா போன்று ஒரு சூப்பர் பைக் வாங்குவதுதான். எனவே, முதலில் நான் சூப்பர் பைக்தான் வாங்கப் போகிறேன் என்று சிலர் மனதில் கற்பனையை வளர்த்துக் கொண்டு காத்திருப்பதுண்டு. இதுவும் தவறுதான். முதலில் சாதாரண பைக்குகளை வாங்கி ஓட்டிப் பழகி நன்கு அனுபவம் கிடைத்தவுடன் இதுபோன்ற கனவு அல்லது சூப்பர் பைக்குகளை வாங்குவது உத்தமம். ஏனெனில், சூப்பர் பைக்குகளின் டிரைவிங் முறை மற்றும் கட்டுப்படுத்தும் முறை ஆகியவை வித்தியாசமானது

கொஞ்சம் தூரம் ஓகே
**************************

வெறும் குறைந்த தூர பயணங்களுக்கு மட்டுமே பைக்குகள் ஏற்றது என்ற மாயை பலரிடம் உள்ளது. குறிப்பாக, பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏற்றதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், கன்யாகுமரியிலிருந்து, லடாக்கிலுள்ள கர்துங்க் லா வரையிலான "கே2கே" பைக் பயணங்கள் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டன. இந்த பைக்குகளில் தேவையான பொருட்களுடன் இருவர் செல்வதை சாத்தியமாக்கி வருகின்றனர்

ப்ரண்ட் பிரேக்கை தொடாதே...
*****************************

புதிதாக வண்டி ஓட்டுபவர்கள் முன்பக்க பிரேக்கை பிடிக்க வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துவதுண்டு. முன்பக்க பிரேக்கை பிடித்தால் பைக் சறுக்கி கீழே விழுந்துவிடும் என்று கூறுவதுண்டு. ஆனால், புதிதாக வண்டி ஓட்டுபவர் மிதமான வேகத்தில் கற்றுக் கொள்வதோடு, முன்பக்கம் மற்றும் பின்பக்க பிரேக்குகளை சரியான அளவில் பிடிக்க கற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில், வண்டியை நிறுத்துவதற்கான 70 சதவீத நிறுத்தும் திறன் முன்பக்க பிரேக்குக்கு உண்டு. ஆனால், சரியான அளவில் பிடிக்க பழகுவது அவசியம்

பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்
********************************

கன்னியர்களை கவர்வதற்கு பைக்கை சிறந்த ஆயுதமாகவும், பெண்களுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதுபோல் பல காளையர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், சில பெண்களை தவிர பெரும்பான்மையான பெண் சமூகத்தினருக்கு பைக் என்றால் பிடிக்காது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கழுத்து முறியும்...
***************************

மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது கீழே விழந்துவிட்டால் கழுத்து முறிந்துவிடும் ஆபத்து உள்ளதாக கட்டுக் கதைகள் உள்ளன. ஆனால், ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்டுகளில் கீழே விழுந்து தரையில் மோதும்போது அதிர்வுகளை ஹெல்மெட் உள்வாங்கிக் கொண்டு தலை காக்கும் கவசமாக இருப்பதோடு, கழுத்துக்கும் பாதுகாப்பை தரும் வகையிலேயே டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ரோடு தெரியாது...
*******************************

ஹெல்மெட் அணிந்து செல்லும்போது பார்வை திறன் பாதிக்கும் என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால், ஹெல்மெட் அணிந்து செல்பவர்களைவிட ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள்தான அதிக விபத்துக்களில் சிக்கியிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், ஹெல்மெட் அணியும்போது தூசி மற்றும் காற்று வேகத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாக குறைக்கின்றன. எனவே, சாலையை தெளிவாக கவனித்து ஓட்டுவதற்கு ஹெல்மெட் உதவுகிறது. எனவே, ஹெல்மெட் அணிவதால் பார்வை திறன் குறையும் என்பதும் தவறான கருத்தாக இருக்கிறது.

சரக்கு... சாவு மணி
******************************

கொஞ்சமாக சரக்கடிச்சிட்டு வண்டி ஓட்டுனா சூப்பரா வண்டி ஓட்டலாம் என்ற கருத்து பரவலாக இளைஞர்களிடம் உள்ளது. ஒரு பீர் அடிச்சா ஒன்னும் செய்யாது மச்சி என்ற கற்பனைகளும் உருண்டோடுகின்றன. ஆனால், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதை கண்கூடாக பார்ப்பதோடு, பல ஆய்வு முடிவுகள் மூலமும் இந்த உண்மை புலப்படுகிறது. எனவே, கொஞ்சமா அடிச்சிட்டு ஓட்டுனா சூப்பரா டிரைவ் பண்ணலாம் என்ற கருத்தை இன்றுடன் மாற்றிக் கொள்வது நலம்

அசகாய சூரர்
****************************

பைக் ஓட்டுவதில் அசகாய சூரனாக இருப்பவர்கள் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை விட சாதாரண பிரேக் மூலம் வண்டியை சிறப்பாக நிறுத்துவார் என்ற எண்ணமும் இருக்கிறது. இதுவும் தவறானதே.

வேகமா ஓட்டு...
******************************

சில சமயம் முன்பக்க வீல் கொஞ்சம் அதிகமாக வாப்லிங் என்று கூறும் வளைந்து நெளிந்து கோணலாக சுற்றும்போது, வேகமாக ஓட்டினால் சரியாகிவிடும் என்று அட்வைஸ் கொடுக்கின்றனர். இதுபோன்று வீல் வாப்லிங் ஆகும்போது உடனடியாக மெக்கானிக்கிடம் காட்டி ரிம்மில் வளைவு ஏற்பட்டுள்ளதா அல்லது டயர் பக்கவாட்டு பகுதிகள் சரியாக உள்ளனவா என்பதை சோதித்திவிட வேண்டும். அதைவிட்டு, வேகமாக போன சரியாகிவிடும் என்பது வினையை விலை கொடுத்து வாங்குவதாகிவிடும்

சூப்பர் பெட்ரோல் போட்டால்...
**********************************

பிரிமியம் அல்லது சூப்பர் பெட்ரோல் மூலம் பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. எஞ்சினுக்குள் எரிபொருள் எரிக்கும் தன்மை சீராக இருக்கும் என்பதால் ஸ்மூத்தான ரைடிங்கை கொடுக்குமே தவிர, வண்டியின் பவர் கூடுதலாகும் என்பது தவறானதாகும். மேலும், அதிக ஆக்டேன் கொண்ட பெட்ரோல் அதிக பவர் கொண்ட எஞ்சின்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். குறைந்த சிசி திறன் எஞ்சின் கொண்ட பைக்குகளில் பிரிமியம் பெட்ரோல் போடும்போது பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனம் குறைய வாய்ப்புண்டு

சூப்பர் டிரைவர்
**************************

மிகுந்த அனுபவம் வாய்ந்த டிரைவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் வண்டியை சிறப்பாக கையாள்வார் என்ற எண்ணமும் தவறானதே. டிரைவரின் மனநிலை, உடல் நிலை ஆகியவற்றை தவிர, எதிரில் வரும் வாகன ஓட்டியாலும் ஆபத்து வரும் வாய்ப்பு உள்ளது.

பிஎம்டபிள்யூ கம்பெனி
******************************

பிஎம்டபிள்யூ நிறுவனம் கார்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமாக பலர் கூறுவதுண்டு. ஆனால், பிஎம்டபிள்யூ முதன்முதலாக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில்தான் ஈடுபட்டு தற்போதும் செய்து வருகிறது. 1903ம் ஆண்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பை துவங்கிய அந்த நிறுவனம் 1932ல்தான் தனது முதல் ஏஎம்4 காரை தயாரித்தது.

குழந்தை பொறந்தா...
**********************************

குழந்தை பெற்றவுடன் பலர் பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவது குறையும் அல்லது தவிர்ப்பதாக கூறப்படுவதுண்டு. ஆனால், பலர் குழந்தை பிறந்தவுடன் முன்பைவிட சிரத்தையுடன் மோட்டார்சைக்கிள்களை சிறப்பாகவும், ஆர்வமாகவும் ஓட்டுவதை காண முடிகிறது.
பட உதவி: Motorcyclist Magazine
-அஷ்ரப்